என்றைக்கும் அல்லாத
ஞாயிறு ஒன்றில்
வந்து விழுந்ததொரு
‘மிஸ்ட் கால்’.
மிஸ்ட்கால் செய்தவர்
முகம் அறியாதவராயினும்
‘மிஸ்’ பண்ண விரும்பாத
மாடர்ன் மங்கை..
மெசேஜிற்குத் தாவி
அழைத்து உரையாடி
இணையம் வழியே
இதயங்களை இணைத்து
கவிதைகள் இயக்கி
கருத்துகள் பேசிக்
கவலைகள் பகிர்ந்து
கனவுகளில் பறந்து
மற்றும் ஒரு
ஞாயிறு ஒன்றில்
சந்திப்பும் நடந்தேறி
அண்ணலும் நோக்கி
அவளும் நோக்க
செம்புலப் பெயல்நீர்
கலந்தது போல
அன்புடை நெஞ்சம்
இரண்டும் கலந்தன..
காதல் பிறந்தது!
நாட்கள் ஓடின..
சுபயோக சுபதினம்
ஒன்றில்..
இருவருக்கும் திருமணம்
தனித்தனியாக!
எக்காலம் ஆயினும்
காதலுக்குக்
கண் தானில்லை
சாதி இருக்கிறது..
சாதியைக் கட்டிக்கொண்டு
புரளும் பெற்றோர்களும்
இருக்கிறார்கள்!
மறக்கத் துடிக்கும்
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!
நன்றி
நன்றி
No comments:
Post a Comment